உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை வந்த பிறகு எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன்-சதீஷ்

Published On 2024-09-15 09:50 GMT   |   Update On 2024-09-15 09:50 GMT
  • மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
  • அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.

கோவை:

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது.

ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.

இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறி சிங்காநல்லூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சதீஷ், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வரும் ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டை எடுத்துள்ளார். நான் வீடியோ எடுத்து பரப்பவில்லை எனவும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் கூறியதாவது:-

நான் பாரதீய ஜனதாவில் கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை பொறுப்பு வகித்துள்ளேன். கடந்த 31-ந் தேதியே எனது பதவி காலம் முடிந்து விட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்துள்ளார்.

மற்றொன்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமையும், தேசிய தலைமையும் தான் செய்வார்கள். அதையும் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.

இந்த பிரச்சனையில் வீடியோ எடுத்தது அங்கிருந்த 4, 5 பேர் தான். நான் அந்த வீடியோவையே இதுவரை சரியாக கூட பார்க்கவில்லை. இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. அந்த தகவலை தான் நான் பிறருக்கு அனுப்பினேன். பார்வேட் செய்தது தவறு என்றால் வீடியோ வெளியிட்ட நபர் மீது கட்சி விரோத நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News