உள்ளூர் செய்திகள் (District)

தீவைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.

ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் ஆத்திரம்- மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வாலிபர்

Published On 2022-12-26 11:39 GMT   |   Update On 2022-12-26 11:39 GMT
  • மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
  • எரித்த மர்மநபர் யாரென்று கண்டறிய அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த வாலிபருக்கு போலீசார் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அபராதத்திற்கு ரசீதை கொடுத்து கோர்ட்டில் செலுத்தி வாகனத்தை எடுத்து கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காங்கயம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு புறக்காவல் நிலையத்தில் போலீசார் இல்லாத நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் பல்சர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதனிடையே அங்கு வந்த போலீசார் மோட்டார் சைக்கிள் எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

இதையடுத்து அதனை எரித்த மர்மநபர் யாரென்று கண்டறிய அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காங்கயம் சாம்பவலசு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 32) என்பதும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து விட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News