அரியலூர் பகுதிகளில் கத்தி முனையில் நகை, பணம் பறித்த 3 பேர் அதிரடி கைது
- அரியலூர் பகுதிகளில் கத்தி முனையில் நகை, பணம் பறித்த 3 பேர் அதிரடி கைது செய்யபட்டார்
- போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26). இவர் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வண்ணாங்குட்டை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் (குற்றப்பிரிவு) தலைமையிலான போலீசார், அன்று பிற்பகல் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் பதில் அளித்ததையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த நித்தியானந்தம் (26), பூனைக்கன்னித் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.
இதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பதும், கடந்த 7.4.2023 அன்று அரியலூர் பல்லேரி கரை அருகே நடந்துச் சென்ற செல்வியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரிந்தது. இதே போல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி போன்ற பல்வேறு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.