உடையார்பாளையம் அருகே போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது
- உடையார்பாளையம் அருகே போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது செய்யபட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் சார்பதிவாளர் (பொ) அலுவலகத்தில் சார்பதிவாளராக சாந்தகுமார் (வயது 44) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர்கொடி, இவர்களது மகளும் வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் மனைவியுமான வினிதா ஆகியோருக்கு தேளூர் காலனி தெருவை சேர்ந்த சேகர் (50) என்பவர் அவர் அனுபவித்து வந்த இடத்தை விற்பனை செய்ய இரு ஆவணங்கள் முறையே ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இடத்தை வாங்கிய மலர்கொடி மற்றும் அவரது மகள் வினிதா அங்கிருந்த முட்களை அகற்றினர். இதையரிந்த கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இந்த இடத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த ஆவணங்களை சரிபார்த்த போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் ஆவணத்தில் இணைக்கப்பட்ட தடையின்மை சான்று போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் காவல்நிலையத்தில் சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.