பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
- பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
- முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு
அரியலூர்:
தமிழ்நாடு நாள் விழா வருகிற 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி துறை மாவட்ட உதவி இயக்குநர் சித்ரா தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாண, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் 31 பேரும், கட்டுரை போட்டியில் 29 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், பேச்சு போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி சுஜீதா முதல் இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் இப்ராஹிம் 3-வது இடத்தையும், பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சுகுணா 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
கட்டுரை போட்டியில் கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி அர்ச்சனா முதல் இடத்தையும், கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி குணசுந்தரி 2-ம் இடத்தையும், மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி ஜெயதிரிஷா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விரைவில் வழங்கவுள்ளார். இதனிடையே பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.