உள்ளூர் செய்திகள்

தா.பழூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

Published On 2023-04-23 04:59 GMT   |   Update On 2023-04-23 04:59 GMT
  • தா.பழூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு போனது
  • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் சிலால் நால்ரோடு பகுதியில் வானதிரையான் பட்டினம் செல்லும் சாலையில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். மெடிக்கலுக்கு அருகிலேயே அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கணபதி மளிகை கடையை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதேபோலவே அவர் கடைக்கு அருகில் உள்ள செல்லம்மாள் நடத்தும் மெடிக்கல் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக கணபதி செல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். மளிகை கடைக்குள் சென்று பார்த்தபோது சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. அதுபோலவே மெடிக்கல் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

அத்துடன் மெடிக்கலில் இருந்து வெள்ளி கொலுசு உள்ளிட்ட சில பொருட்களையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தடவியல் சப் இன்ஸ்பெக்டர் சத்யராஜ் சம்பவ இடத்திலிருந்து கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News