ஓசூர் அருகே நல்லூரில் அரசு பள்ளி தலைமையாசிரியை குறித்து தவறான வீடியோ பரப்பிய நபர் மீது நடவடிக்கை -ஏ.எஸ்.பி.யிடம் மாணவியரின் பெற்றோர் மனு
- உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
- சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியையாக பணி புரிந்து வருபவர் தர்மசம்வர்த்தினி. இந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக கீழ்த்தரமாகவும், தனது பள்ளி மேம்பாட்டு செயல்பாடுகளை தவறாகவும்,பொய்யாகவும் சித்தரித்து ஒரு நபர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மசம்வர்த்தினி மனு அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தலைமையாசிரியைக்கு ஆதரவாக நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ராதா, குமார் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் நேற்று ஓசூர் ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு சென்று, உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தலைமையாசிரியை தர்மசம்வர்த்தினி குறித்து கீழ்த்தரமாகவும் அவரது பள்ளி பணிகளை பாதிக்கும் வகையிலும் பொய்யாக வீடியோ பரப்பி வரும் நபர் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.