அத்திக்கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை வங்கிப் புத்தகம் கேட்டு பள்ளியை விட்டு வெளியேற்றியதால் பெற்றோர்கள் முற்றுகை
- 19 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
- குழந்தைகளுடன் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திக்கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அத்திக்கானூர் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜே.ஆர்.நகர் பகுதியில் இருந்து 19 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளிகள் மாந்தோப்புகள் வழியே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற காரணத்தால் அரசு மூலம் எஸ்கார்ட் எனப்படும் பாதுகாவலர் கடந்த 2012 -ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.
பாதுகாவலர் பெண்மணிக்கு நேரடியாக வங்கி கணக்கு மூலம் மாத ஊதியம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பாதுகாவலர்களுக்கான பணத்தை அந்தந்த மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த அரசு முடிவு எடுத்தது. இதன் காரணமாக ஜெ.ஆர்.நகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் வங்கி கணக்குகள் தொடங்காத பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின தலைமை ஆசிரியை மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்பியும், அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
பின்னர் எதிரே உள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு வட்டார கல்வி அலுவலர் இல்லாத காரணத்தால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த விட்டு கல்வி அலுவலர் லோகநாயகி பெற்றோர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.