உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருக்கு விருது வழங்கப்பட்ட காட்சி.

செங்கோட்டையில் 10, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது

Published On 2022-07-18 09:09 GMT   |   Update On 2022-07-18 09:09 GMT
  • நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.

செங்கோட்டை:

தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை மற்றும் அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் கல்வி பயின்று 10-ம், 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் நடந்தது.

முன்னதாக கொரோனா பரவல் காலம் தொட்டு இன்றுவரையில் சுமார் 100 ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிவரும் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகத்திற்கு சிறந்த சேவைநாயகன் விருது அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞா் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார்.

பண்பொழி ஐ.ஏ.எஸ். அகாடமி மருதையா முன்னிலை வகித்தார். அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் நிறுவனா் சுதர்சன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீஅகிலானந்தமகராஜ் மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஆசி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தமருத்துவா்கள் கலா, நாகராஜன், ஓமந்துாரார்அரசு மருத்துவமனை மருத்துவா் முருகானந்தம், விவேகானந்தா கேந்திர மாவட்ட ஒருங்கிணை்ப்பாளா் கருப்பசாமி, வல்லம் ஊராட்சி மன்ற தலைவா் ஜமீன்பாத்திமா பிரானுார் ஊராட்சி மன்ற தலைவா் ஆவுடையம்மாள்ராஜா, செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர் ஒளி ராமதாஸ், செண்பகராஜன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீசங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை மற்றும் அறம்செய்ய விரும்பு டிரஸ்ட் உறுப்பினா்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News