உள்ளூர் செய்திகள்

கரடி சேதப்படுத்திய வீட்டை காணலாம்

மஞ்சூர் அருகே 2 வீடுகளில் புகுந்து அரிசி, தின்பண்டங்களை ருசித்த கரடி- பொதுமக்கள் அச்சம்

Published On 2022-06-20 04:02 GMT   |   Update On 2022-06-20 04:02 GMT
  • பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.
  • மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓணிகண்டி, மட்டகண்டி பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அவ்வாறு வனத்தை விட்டு வரும் கரடிகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதுடன், வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருக்க கூடிய அரிசி பருப்பு, மாவு, எண்ணெய் வகைகளை ருசி பார்த்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.

ஓணிகண்டி அண்ணா மலைப்பகுதியை சேர்ந்தவர் துரை. இவர் நேற்றிரவு வழக்கம்போல குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் வீட்டின் சமையல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் எழுந்து சென்று பார்த்தார். அப்போது கரடி ஒன்று அங்கிருந்த தின்பண்டங்களை எடுத்து ருசி பார்த்து கொண்டிருந்தது.

இதனை கண்டதும் அதிர்ச்சியான துரை சத்தம்போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த கரடி வீட்டை விட்டு வெளியில் வந்து அங்குள்ள புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனை கண்ட மூதாட்டி சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

பின்னர் அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தகரத்தை தட்டியும், தீ மூட்டியும் கரடியை அங்கிருந்து விரட்டினார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளில் கரடி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News