நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம்
- லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
- இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி யில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் விநாயகர், 2-வதாக சோமேஸ்வரர், சவுந்தரவல்லி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. 3-வதாக பெரிய தேரில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி னார்.
தேரோட்டத்தை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று மாலை தொடங்கிய தேரோட்டம், தாரமங்கலம் பிரிவு சாலையில் சென்று நிலை நிறுத்தப்பட்டது.
2-வது நாளான இன்று மாலை தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து நங்கவள்ளி பஸ் நிலையம் வரையிலும், நாளை 8-ந் தேதி பஸ் நிலையத்தில் இருந்து நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகம் வரையிலும், நாளை மறுநாள் 9-ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு பிரிவு தோப்பு தெரு பிரிவு வரையிலும், 10ம் தேதி தோப்பு தெரு பிரிவிலிருந்து கோவில் முன்பு தேர் நிலை சேர்கிறது.
இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.