உள்ளூர் செய்திகள்

4 பேர் பலியான விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர், போர்மேன் கைது

Published On 2024-06-30 09:32 GMT   |   Update On 2024-06-30 09:32 GMT
  • பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
  • 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த ஆலையில் தற்போது வெளி மாநில தேவைகளுக்காக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று காலை 4 தொழிலாளர்கள் ஒரு அறையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆலையில் இருந்த 3 அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

பணியில் ஈடுபட்டிருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41), நடுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (40), மடத்துப்பட்டி ஆர்.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (43), மோகன் (50) ஆகிய 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் உடல் கருகி இறந்த 4 தொழிலாளர்கள் உடல்களை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் மற்றும் தாசில்தார் லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆலை உரிமையாளர் சகாதேவன், போர்மேன் குருசாமி பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News