அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்த பொதுமக்கள்
- குறிச்சி, குலவணிகர்புரம், கொக்கிரக்குளம் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு 10,15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
- தற்போது அணை மற்றும் ஆற்றில் தண்ணீர் போதிய அளவு உள்ளது. ஆற்றின் அருகே எங்கள் பகுதி அமைந்து இருந்தாலும், 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
நெல்லை:
மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-
31-வது வார்டுக்குட்பட்ட குறிச்சி, குலவணிகர்புரம், கொக்கிரக்குளம் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு 10,15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது அணை மற்றும் ஆற்றில் தண்ணீர் போதிய அளவு உள்ளது. ஆற்றின் அருகே எங்கள் பகுதி அமைந்து இருந்தாலும், 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மேயர், மேலப்பாளையம் மண்டல அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை நடக்கவில்லை.
மேலும் எங்கள் பகுதியில் சாலை வசதிகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலருக்குட்பட்ட பகுதி என்பதால் எங்கள் பகுதியை புறக்கணிப்பதாக சந்தேகம் வந்துள்ளது.
எனவே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.