உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறை: குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-08-18 06:41 GMT   |   Update On 2024-08-18 06:41 GMT
  • சாரல் திருவிழா களைகட்டி உள்ளது.
  • குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவி,சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வரும் நிலையில், சாரல் திருவிழாவும் நடைபெறுவதால் விழா களைகட்டி உள்ளது.

சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவி. மெயின் அருவி.

பழைய குற்றால அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று காலையில் பெண்களுக்கான கோலப் போட்டியும் ஆண்களுக்கான ஆணழகன் போட்டியும் நடை பெற்றது.

மாலையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News