உள்ளூர் செய்திகள் (District)

பழனியில் சாமி தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்

Published On 2024-10-06 06:17 GMT   |   Update On 2024-10-06 06:17 GMT
  • விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
  • மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர்.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர்.

மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.

இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாதவிநாயகர் கோவில் அருகே தகவல் மையம், முதல் உதவி மையம், குழந்தைகள் பாலூட்டும் அறை பூஜை செய்து திறக்கப்பட்டது.

இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

நவராத்திரி விழாவை யொட்டி பெரிய நாயகியம்மன் கோவில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவிலில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News