உள்ளூர் செய்திகள்

மாங்கரை ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-07 09:14 GMT   |   Update On 2023-06-07 09:14 GMT
  • மாற்றுத்தி றனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் 4 மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும்.
  • மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும்

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாங்கரை ஊராட்சியில் மாற்றுத்தி றனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் 4 மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசும் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிக் கணக்கில் முறையாக ஊதியத்தினை செலுத்த வேண்டும், மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன், ஊராட்சி செயலர் மாதையன் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் மாங்கரை ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் மேற்கொள்ளும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், பணியின் போது மருத்துவ வசதி குடிநீர் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டப் பொருளாளர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கரூரான் சிறப்புரையாற்றினார்.

இதில் வட்ட துணை தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் பவுனேசன், சக்திவேல், முனியம்மாள், சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News