ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
தருமபுரி:
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி நீர்மட்டம் எட்டி உள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என 2 அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து கர்நாடகா- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு பகுதிக்கு வரத் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதி வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக வந்த கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்ட இந்நிலையில் இன்று நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடி அளவில் அதிக ரித்து வந்து கொண்டிருப்பதால், அருவிகளிலும் மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லு முடியாமல், அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.