உள்ளூர் செய்திகள் (District)

பாம்பன் புதிய பாலத்தில் மின்சார ரெயில் சோதனை

Published On 2024-10-20 06:16 GMT   |   Update On 2024-10-20 06:16 GMT
  • பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
  • மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

மண்டபம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாம்பன் புதிய ரெயில் பாலம் வழி யாக மண்டபம்-ராமேசு வரம் இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மண்டபத்திலிருந்து ஒரு என்ஜினுடன், காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ராமேசுவரத்திற்கு சென்றது. முதலில் 30 கி.மீ. வேகத்தில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ. வேகம், 60 கி.மீ. வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம்-ராமேசுவரம் இடையே மின்சார ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார ரெயில் இயக்க அமைக்கப்பட்ட மின்கம்பங் களில் மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் தற்போது பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்ட வாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

விரைவில் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரெயில் பாலம் ஆய்வு நிறைவு அடைந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News