- கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
- புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து மல்லியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து புளியம்பட்டி வார சந்தைக்கு காய்கறி பொருட்களை வாங்க வந்துள்ளார்.
பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு மல்லியம்பட்டி க்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் தனது ஊர் செல்வதற்கு அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு தலை சுத்தி மயக்கம் வந்ததாக கூறுபடுகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்பு சிறு தூரம் சென்றதும் மூதாட்டி மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. பதட்டம் அடைந்த மூதாட்டி அலறினார்.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர், கண்டெக்டர் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மூதாட்டி பொன்னம்மாள் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.