உள்ளூர் செய்திகள் (District)

பிரபல ரெயில் கொள்ளையனை மடக்கி பிடித்த ஈரோடு போலீசார்

Published On 2024-08-23 10:12 GMT   |   Update On 2024-08-23 10:12 GMT
  • மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

ஈரோடு:

மன்னார்குடியில் இருந்து கோவை வரை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி கோவையை சேர்ந்த சண்முகவேலன் என்பவர் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து உள்ளார்.

அப்போது ஈரோடு ரெயில் நிலையம் வந்த போது ரெயிலில் இருந்த சண்முகவேலின் விலை உயர்ந்த மொபைல் மற்றும் நவரத்திரன மாலை, நவரத்தின கல் மோதிரம், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

சண்முகவேல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சண்முகவேலன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஈரோடு ரெயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள வெளி பகுதியில் இருந்த பூங்காவில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராமசாமிபுரம், 2-வது தெருவை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 48) என தெரிய வந்தது.

மேலும் ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து சங்கரபாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மொபைல், நவரத்தின கற்களை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சங்கரபாண்டியன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சங்கரபாண்டியன் மீது ஏற்கனவே சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள், சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, கழுகுமலை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சிவகாசியில் 1, ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் 1, தூத்துக்குடியில் 3 திருட்டு வழக்குகள், தென்காசியில் 1 திருட்டு வழக்கு என மொத்தம் 22 திருட்டு வழக்குகள் சங்கர பாண்டியன் மீது நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News