உள்ளூர் செய்திகள் (District)

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்கள்.


நடுக்கடலில் மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் உபகரணங்கள் பறிப்பு

Published On 2024-08-27 09:14 GMT   |   Update On 2024-08-27 09:14 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது.
  • இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

நாகப்பட்டினம்:

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

இந்நிலையில் நேற்று மாலை அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

தொடர்ந்து, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

அதனை தொடர்ந்து, காயமடைந்த மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு வந்தனர். பின்னர், சக மீனவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் எங்களுக்கு சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது சக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News