உள்ளூர் செய்திகள் (District)

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீடிப்பு

Published On 2024-07-18 05:03 GMT   |   Update On 2024-07-18 05:03 GMT
  • அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

கோவை:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி முதல் அருவிக்கான பாதை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் சாடிவயல் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழிப்பாதையிலும் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதுதொடர்பாக வனஅதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை உத்தரவு தொடரும்.

மேலும் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் குற்றாலம் அருவியில் குளிக்க வர வேண்டாமென தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News