பொருள் வாங்குவது போல நடித்து பெட்டிக்கடையில் இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை-பாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பெட்டி கடை வைத்து நடத்தி வருபவர் பெருமாள்.இவரது மனைவி விஜயலட்சுமி (52). சம்பவத்தன்று விஜயலட்சுமி பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது பெட்டிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். இருவரும் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர்.பணத்தை வாங்கிய அவர் கல்லாவில் இருந்து மீதி பணத்தை கொடுப்பதற்கு பணத்தை கீழே குணிந்து எடுத்தபோது மர்ம நபர்கள் இருவரும் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 2பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டு திருடன், திருடன் என அப்பகுயில் உள்ளவர்களை அழைத்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் பட்டப்பகலில் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.