உள்ளூர் செய்திகள் (District)

பாக்கு மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை

Published On 2024-05-31 05:30 GMT   |   Update On 2024-05-31 05:30 GMT
  • யானை வந்ததை அறிந்த பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
  • யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பிதர்காடு அருகே மாணிவயல் என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதி உள்ளது. இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

சம்பவத்தன்று இரவு இந்த கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. யானை வெகு நேரமாக ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்தது. யானை வந்ததை அறிந்த பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

ஊருக்குள் சுற்றிய காட்டு யானை அந்த பகுதியில் உள்ள மதில் சுவரைக் கடந்து, யானை உள்ளே நுழைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.பொதுமக்கள் சத்தத்தை கேட்டதும் யானை அங்கிருந்து அருகே உள்ள பாக்கு தோட்டத்தை நோக்கி சென்றது. பாக்கு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தி சென்று விட்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். பகலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே வனத்துறையினர் சந்தனக்குன்னு மற்றும் மானிவயல் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வனசரகர் ரவி பேசியதாவது:-

யானைகள் ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் சென்றால் வாகனங்களிலும், கையில் போதிய வெளிச்சங்களை வைத்து கொண்டும் செல்ல வேண்டும்.

யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News