உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை கொலை செய்த பேரன், மருமகள் கைது

Published On 2024-07-05 06:39 GMT   |   Update On 2024-07-05 06:39 GMT
  • அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால்.

இவரது மனைவி அனுமக்கா (வயது 82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூதாட்டி அணுமக்கா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் மூதாட்டி கடந்த 27-ந் தேதி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அழுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காது மற்றும் மூக்கு பகுதியில் வெட்டு காயங்கள் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை குற்றவாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அனுமக்காவை கொலை செய்த, அவரது மகன் வழி பேரன் சிவராஜ் மகன் சிவகுமார் (வயது 31), அதற்கு உடனடியாக இருந்த மருமகள் மலர் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிவக்குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. எனது பாட்டி அனுமக்காவிடம் அடிக்கடி சென்று அடிக்கடி பணம் வாங்கி வருவேன். அதன்படி கடந்த 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் போதையில் பாட்டி வீட்டுக்கு சென்றேன்.

அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.

அப்போது அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, தலையணை வைத்து அமுக்கி பாட்டியை கொலை செய்தேன்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்த 1½ நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டேன்.

பாட்டியிடம் எடுத்த நகைகளை எனது தாய் மலரிடம் கொடுத்து, நடந்த விவரத்தை கூறினேன். எனது தாய் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் நாங்கள் ஒன்றும் தெரியாது போல் ஊரிலேயே இருந்தோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News