உள்ளூர் செய்திகள் (District)

சேலம், குன்னூரில் விடிய விடிய கனமழை: பள்ளிகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதி

Published On 2024-10-09 04:33 GMT   |   Update On 2024-10-09 04:33 GMT
  • மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.
  • தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை கொட்டும். குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

நேற்று காலைமுதலே வானம் மப்பும், மந்தார முமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.

அதிலும் குறிப்பாக குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எல்லநல்லி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்க ம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை வெளுத்து வாங்கியது.

குன்னூர்-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

பர்லியார் அரசு தொடக்க ப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் பள்ளிக்குள் புகுந்தது.

இதனால் அங்குள்ள வகுப்பறைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம்

சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதேபோல் நேற்றும் சேலம் மாநகரம், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, கரியகோவில், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

சேலத்தில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது.

சேலம் மாவட்டத்தில் மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் புழுக்கமும் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் நேற்று 6 மி.மீட்டர் அளவு மழை பெய்தது. ஆனாலும் நேற்று மாலை முதல் கடுங்குளிர் நிலவியது. குறிப்பாக இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். காலை நேரத்தில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.

இதே போல் அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இரவில் மழை பெய்த நிலையில் காலையில் குளிருடன், பனிமூட்டமும் நிலவியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பகலில் வெயில், மாலை, இரவில் மழையுடன் குளிர், காலை நேரத்தில் பனிப்பொழிவு என மாறி, மாறி நிலவிவரும் சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

சேலம்-26, ஏற்காடு-6, வாழப்பாடி-28.2, ஆணைமடுவு-23, ஆத்தூர்-5.2, கெங்கவல்லி-15, தம்மம்பட்டி-12, ஏத்தாப்பூர்-3, கரியகோவில்-45, வீரகனூர்-10, சங்ககிரி-1.4, ஓமலூர்-8, டேனிஷ்பேட்டை-6.5 என மாவட்டம் முழுவதும் 189.7 மில்லி மீட்டர் மழை பெய்தது.

Tags:    

Similar News