உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 11 வயது சிறுவன் மது விற்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு -போலீசார் நேரில் சென்று விசாரணை

Published On 2022-10-19 09:24 GMT   |   Update On 2022-10-19 09:24 GMT
  • சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை,போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்தூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.அப்போது அந்த சிறுவனின் வீடு பூட்டியிருந்தது. அக்கிராமத்தில் விசாரித்த போது மது விற்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவனின் தந்தை இறந்து விட்டார். எனவே தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறான்.இதையடுத்து அந்த சிறுவனின் தாய் மது விற்று வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய் கைதான நிலையில் அந்த சிறுவன் மது விற்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த வீடியோ வெளியானதால் சிறுவனின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் ஊருக்கு திரும்பியதும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

11 வயது சிறுவன் மது விற்ற வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News