தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு -ரூ.27.17 லட்சத்திற்கு ஏலம்
- கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது.
- இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி,
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 47 விவசாயிகள் கொண்டு வந்த 4037 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.27.17 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.525-க்கும், அதிகபட்சமாக ரூ.745-க்கும், சராசரியாக 673 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து ஐந்து லட்சம் மற்றும் இரண்டு லட்சத்திற்கு விற்பனையானது. தற்போது பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 4037 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 27.17 லட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.