உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே சோதனைச்சாவடிகளில் நிபா வைரஸ் பரிசோதனை தீவிரம்

Published On 2024-09-19 05:03 GMT   |   Update On 2024-09-19 05:03 GMT
  • தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
  • தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.


இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ள கோபனாரி, முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர் மேற்பார்வையில் டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியாகி உள்ளது. இதனால் சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மற்றும் அவை விட்டு செல்லும் பழங்களை தின்பதாலும் பாதிப்பு உருவாகும்.

மேலும் வவ்வால்கள் மூலம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நோய் பரவி மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். இந்த வகை காய்ச்சல் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கும் நோய் பரவ வாய்ப்பு உண்டு.

தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரசால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவையொட்டி அமைந்து உள்ள காரமடை முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

Similar News