புதுக்கடை அருகே கார் மோதிய விபத்தில் பெண் சாவு
- தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சாந்தி பரிதாபமாக இறந்தார்
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதி அள்ளம் என்ற இடத்தை சேர்ந்தவர் திரிசோதரன். இவரது மனைவி சாந்தி (வயது 37). திரிசோதரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
கடந்த 20-ந்தேதி மாலை சாந்தி தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் காப்புக்காடு- புதுக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார். நாட்டுவெள்ளி பகுதியில் அவர் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று சாந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சாந்தி பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை இன்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
இது தொடர்பான புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் சம்மந்தபட்ட கார் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.