திங்கள்நகரில் நாளை பாரதிய ஜனதா-பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போட்டி போராட்டம்
- போலீஸ் குவிப்பு-சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு
- போலீசார் பலத்த பாதுகாப்பு
கன்னியாகுமரி :
திங்கள் நகர் அருகே மேக்கோடு என்ற இடத்தில் புதுக்கடை பாரதிய ஜனதா பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது சில அமைப்புகளை சேர்ந்த 4 பேர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தொடர்புடைய நபர்களை உடனே கைது செய்ய கேட்டு திங்கள்நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது தொடர்பாக குற்றவாளி களுக்கு உதவி செய்ததாக திருவிதாங்கோடு, கோட்டார் பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள் நகரில் நாளை (8-ந் தேதி) காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் போலீஸ் துறை யினர் ஒருதலை பட்சமாக செயல் படுவதாக கூறி பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் திங்கள் நகரில் நாளை காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.