உள்ளூர் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது

Published On 2023-04-23 07:06 GMT   |   Update On 2023-04-23 07:15 GMT
  • இதமான கடல் காற்று வீசுவதால் மாலை நேரங்களில் கடற்கரையில் கூட்டம்
  • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி :

கோடை விடுமுறை சீசன் இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள பள்ளி வாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களி லும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறைநாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியுள்ளது.

சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News