கோடை விடுமுறை சீசன் நிறைவடைந்ததால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
- கோடை விடுமுறை சீசன் பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது
- விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் கியூசெட் வெறிச்சோடி கிடக்கிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படும்.
இதனால் இந்த3மாத காலமும் இங்கு மெயின் சீசன் காலமாகக் கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலாப்பயணிகள் இங்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.
இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கோடை விடுமுறை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது.
தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்றுபார்த்து வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1500 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்து வந்துஉள்ளனர். இதனால் 2 படகு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
அந்த படகுகளும் இருக்கைகள் நிரம்பிய பிறகே விவேகானந்தர் மண்டபத்துக்கு புறப்பட்டு செல்கிறது. அதுவரையிலும் சுற்றுலாப் பயணிகள் படகில் சில நிமிட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்தபுரம் கடற்கரையில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கன்னியா குமரியில் உள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மீன்காட்சிசாலை, கடற்கரையில்உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், மியூசியம் வட்டக்கோட்டைபீச், சொத்தவிளைபீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.