உள்ளூர் செய்திகள்

க.பரமத்தி அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

Published On 2023-02-18 09:21 GMT   |   Update On 2023-02-18 09:21 GMT
  • க.பரமத்தி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்
  • சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

கரூர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அத்திப்பாளையம், சேர்வைகாரன்புதுார், வி.என்.புதுார் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், ஆடுகளை கடித்துவிட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் ஒரு ஆட்டின் கழுத்து பகுதியில் சிறுத்தை கடித்தது போன்றும், சிறுத்தை புலியின் கால் தடம் பதிவான படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் க.பரமத்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி கூறியதாவது: சிறுத்தை புலி நடமாட்டம் குறித்து க.பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். சமூக வலைதளங்களில் வெளியான காயத்துடன் கூடிய ஆடு, கால் தடம் குறித்த போட்டோவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவு வந்த பிறகே சிறுத்தையா என்பது குறித்த முடிவு தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News