உள்ளூர் செய்திகள்

பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்ற கடிதம்: எல்.முருகன் கண்டனம்

Published On 2024-06-28 04:46 GMT   |   Update On 2024-06-28 04:46 GMT
  • ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

சென்னை:

தமிழர் ஆட்சியின் பாரம்பரிய அடையாளமான 'செங்கோல்' புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்தபோது அங்கு பிரதமர் மோடியால் வைக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது என்று யோசித்தபோது ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.

அன்றைய தினம் நேருவிடம் வழங்கப்பட்ட அந்த செங்கோல் பின்னர் அருங்காட்சியகத்தில் இருந்தது. பிரதமர் மோடி அதை கண்டுபிடித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் முறைப்படி கொண்டு வந்து வைத்தார்.

நீதி வழுவாத ஆட்சியின் அடையாளமாக போற்றப்படும் செங்கோல் பாராளுமன்றத்தில் இடம் பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆர்.கே. சவுத்ரி பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அது மன்னராட்சியின் அடையாளம். இங்கு நடப்பது மக்களாட்சி என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.

இந்த கருத்தை தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரித்துள்ளார். செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் இதை ஆதரித்துள்ளது.

டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, `செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உள்பட இந்தியா கூட்டணியினர் செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-

அரசு நடத்துவதில் செங்கோல் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை பற்றி திருக்குறள் பேசுகிறது. சுதந்திரத்திற்கு பின் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் அதிகாரத்தை எப்படி ஒப்படைப்பது என்று ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

அவர் செங்கோலை பயன்படுத்தி நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை காங்கிரஸ் ஓரம் கட்டிவிட்டது. செங்கோல் எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதை பிரதமர் மோடி கண்டு பிடித்து பெருமை சேர்த்தார்.

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சவுத்ரி, பாராளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளது கண்டனத்துக்குரியது.

தமிழக மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பிறகு, சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன. அத்தகைய செங்கோலை புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் கடிதத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சியினரும் செங்கோல் மீது வெறுப்பை தெரிவித்து வருகின்றனர்.

செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால்தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்றும் தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து மூலம் 'இந்தியா'கூட்டணியினர் தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News