உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

சித்திரைப்பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும்

Published On 2023-04-04 08:43 GMT   |   Update On 2023-04-05 05:20 GMT
  • சித்திரைப்பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்தனர்.
  • மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.

மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் இந்த மாதம் 23-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக மே 5-ந் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. விழாவை காண மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விழாவையொட்டி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

கள்ளழகரை காண ஆற்றில் இறங்கிய பக்தர்கள், இருபுறமும் தடுப்புச் சுவர்கள் கட்டியதால் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. நடப்பாண்டு வைகை ஆற்றில் பக்தர்கள் ஏறி இறங்க வசதியாக ஓபுளா படித்துறை, ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் சிரமமின்றி ஆற்றுக்குள் இறங்கி அழகரை தரிசித்து கரையேற முடியும். முடி காணிக்கை செலுத்துபவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடி வெளியேற இயலும். மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவை தேசிய விழாவாக பிரதமர் மோடி அறிவிக்க ஏதுவாக, மதுரையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அழகர் கோவிலில் இருந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம், ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கும் பகுதி, வண்டியூர் மற்றும் அழகர் திரும்பிச் செல்லும் வழித்தடங்கள் ஆகியவை புனித பாதையாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News