ஓடும் லாரியில் ரெடிமேடு ஆடைகள் கொள்ளை
- சினிமா பட பாணியில் ஓடும் லாரியில் ரெடிமேடு ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
''நெடுஞ்சாலை'' திரைப்படத்தில் கதாநாயகன் ஆரி ஓடும் லாரியில் புகுந்து பொருட்களை திருடும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே மாதிரியான சம்பவம், மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், நடுவளவு பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது46). லாரி டிரைவர்.
இவர் சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் இருந்து ரெடிமேடு ஆடைகளை ஏற்றி கொண்டு லாரியில் மதுரைக்குப் புறப்பட்டார். துவரிமான் 4 வழி சாலை சந்திப்பு அருகே, டிரைவர் வெள்ளைச்சாமி லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள ரெடிமேடு ஆடைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
ஓடும் லாரியில் கொள்ளை அடிக்கும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.