உள்ளூர் செய்திகள் (District)

மருதுபாண்டியர்கள் நினைவு தினம்: அமைச்சர்கள், கலெக்டர் மரியாதை

Published On 2024-10-24 05:38 GMT   |   Update On 2024-10-24 05:38 GMT
  • நினைவு நாள் அரசு விழாவாக இன்று கடைபிடிக்கப்பட்டது.
  • காளையார்கோவிலில் அக்டோபர் 27-ந் தேதி குருபூஜை விழா.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சுதந்திர போராட்டத்தில் மருதுபாண்டியர்களை வெள்ளையர்கள் கைது செய்து தூக்கிலிட்டனர்.

இதையடுத்து கடந்த 222 ஆண்டுகளாக அக்டோபர் 24-ந்தேதி திருப்பத்தூரில் அவர்களது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷின் மருத்துவமனை வளாகத்தில் மருது இருவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு அவர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு மண்டபத்தில் நினைவு நாளை அரசு விழாவாக இன்று கடைபிடிக்கப்பட்டது. இன்று காலை மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, உதவி ஆணையர் ரெங்க நாதன், தாசில்தார் மாணிக்க வாசகம், காவல் துறை துணை கண்காணிப் பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர். பெரிய கருப்பன், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவு இடத்தில் அக்டோபர் 27-ந் தேதி குருபூஜை விழா நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News