உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது ஏமாற்று வேலை-ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-08-28 08:17 GMT   |   Update On 2024-08-28 08:17 GMT
  • வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
  • எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

மதுரை:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரையூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது

இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசியதாவது:-

அமெரிக்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போவதனால் கவலையில்லை. அவர் போவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா என்பதுதான் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதன் மூலமாக வேலை வாய்ப்பு வந்துவிட்டது, முதலீடு வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் எல்லாம் பெருகிவிட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள். முதல்வர் என்று சொன்னால் மக்களோடு தான் இருக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்களை வெளிநாட்டுக்கு வரச்சொல்லி அங்கே இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் முதலீடு கிடைத்தது என்று இரண்டு பேரும் சொல்வார்கள் .

இங்கே தானே இருந்தீர்கள் இங்கே முடித்து இருந்தால் அரசிற்கு செலவாவது மிச்சமாய் இருக்கும் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News