மாணவர்களிடையே வானியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த 'நிலா திருவிழா'
- சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும்.
நீடாமங்கலம்:
தேசிய அறிவியல் தினத்தை யொட்டி, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து "நிலா திருவிழா " என்ற நிகழ்வு வலங்கைமான் விருப்பாட்சிபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது.
இதில் வானவியல் அறிஞர் பரமேஸ்வரன் பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களை யும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரங்களையும் காட்டினார்.
மேலும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வலங்கை மான் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் கூறியதாவது:-
மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றார்.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.