உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்து: பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி

Published On 2024-07-08 08:45 GMT   |   Update On 2024-07-08 08:46 GMT
  • இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 18) என்பவரும் உறவினர்கள்.

இந்நிலையில் பச்சகுளம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவை காண்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளானது பச்சகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாவை காண்பதற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News