உள்ளூர் செய்திகள்

வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

ஜேடர்பாளையம் அருகே 600 வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

Published On 2023-05-18 07:34 GMT   |   Update On 2023-05-18 07:34 GMT
  • வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
  • தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஜேடர்பாளை யம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் ஆலை கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தொடர் அசம்பாவித சம்பவங்களால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு முத்துசாமியின் மருமகன் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

அதிகாலை தோட்டத் திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சவால் விடுக்கும் மர்ம கும்பல்

ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி போலீசாருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.

பதட்டம்

இதனிடையே அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சமூக விரோத கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News