- தருமபுரியில் வாலிபர் மர்மான முறையில் உயிரிழந்தார்
- போலீசார் தீவிர விசாரணை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்ச நாயகன அள்ளி, கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (48). கூலி தொழிலாளி இவருக்கு திருமணம் முடிந்து 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இளைய மகன் மணிகண்டன் (21). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு ஒரு வருடமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக பாலகோடு அடுத்த எரனஅள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதில் மணிகண்டன் ஜே.சி.பி. வண்டியின் கிளீனராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வாட்ஸ் அப் மூலம் தங்கவேலுக்கு தன் மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு தங்கவேல் நேரில் சென்று மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மகனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.