உள்ளூர் செய்திகள்

சுவர் சரிந்து விபத்தில் மீட்கப்பட்ட வடமாநில வாலிபர் பலி- மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை

Published On 2023-03-17 06:48 GMT   |   Update On 2023-03-17 06:48 GMT
  • அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
  • எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

எண்ணூர், தாழங்குப்பம் உலக நாதபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழை நீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று மாலை தரையில் இருந்து 10அடி வரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர்க் கால்வாயை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்கனவே பக்கவாட்டில் உள்ள 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள பழைய மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், அம்ரேஷ் குமார் (வயது20) ஆகியோர் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டனர்.

பலத்த காயம் அடைந்த அவர்களை ஸ்டான்லி அரசுஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு தொழிலாளி பிகாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News