உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று காலை வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல்

Published On 2024-06-27 05:27 GMT   |   Update On 2024-06-27 05:27 GMT
  • போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  • போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கோவை:

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையானது கடந்த 18-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று காலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகு ளத்துக்கு செல்வதற்காக கோவை வழியாக ஒரு ஆம்னி பஸ் வந்தது.

இந்த ஆம்னி பஸ் கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வந்தது. இதனை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பஸ்சில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர் பஸ்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ் மத்திய போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த பஸ்சில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, அவர்களை சொந்த ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து வருகிறது.

இதுகுறித்து கோவை போக்குவரத்துத்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, `வெளிமாநில பஸ்கள் தமிழ்நாட்டில் பயணிகளை ஏற்றக்கூடாது. தமிழ்நாட்டு வழியாக மற்ற மாநிலங்களுக்கு சென்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த ஆம்னி பஸ்சை நிறுத்தியுள்ளோம். இந்த பஸ்சில் கேரளா செல்லக்கூடிய 21 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைளை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து தரும்' என்றார்.

Tags:    

Similar News