உள்ளூர் செய்திகள் (District)

அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையின் முகப்பில் குப்பைகளை கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்

Published On 2022-09-04 08:28 GMT   |   Update On 2022-09-04 08:28 GMT
  • கருவூல காலனி, அண்ணா நகர், தீயணைப்பு துறை குடியிருப்பு, உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது.
  • மக்கள் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

தருமபுரி,

தருமபுரி யூனியனுக்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து. மாவட்டத்தில் பெரிய பஞ்சாயத்து ஆகவும் இருந்து வருகிறது.

இந்த பஞ்சாயத்தில் தான் தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம், கருவூல காலனி, அண்ணா நகர், தீயணைப்பு துறை குடியிருப்பு, உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

மேலும் தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தினந்தோறும் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு செல்வதற்கு பிரிவு சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையின் முகப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அமைந்துள்ளது பின்னர் அதை கடந்து தீயணைப்பு துறை எஸ்.பி. அலுவலகம், கருவூல காலனி, தீயணைப்பு துறை குடியிருப்பு, அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த பகுதியில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்திற்கு எதிரே தினம் தோறும் அப்பகுதியில் உள்ள மக்கள் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், என அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர். மேலும்எஸ்.பி. அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியார்களின் வணிக வளாகத்தில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுநீர்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு முன் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கட்டிடத்தை ஒட்டி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பலமுறை இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கருவூல காலணிக்கு செல்லும் பாதை வழியாக தான் எஸ்.பி. அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், கருவூல காலனி பொதுமக்கள், அனைவரும் சென்று வர வேண்டும். முக்கியசாலியான இந்த சாலையின் முகப்பில் குப்பைகளை பொதுமக்கள் தினமும் கொட்டி வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் இந்த குப்பைகளை தினந் தோறும் நேரடியாக சென்று பொதுமக்கள் இடத்திலே பெற்று வர வழிவகை செய்ய வேண்டும். மேலும் தனியார் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் முகப்பில் தேங்கி நிற்பதால் அருகில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் பணி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்கி நிற்காமல் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News