உள்ளூர் செய்திகள் (District)

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி தருமபுரியில் கலைநயத்துடன் விதவிதமாக தயாராகும் சிலைகள்

Published On 2022-08-24 09:13 GMT   |   Update On 2022-08-24 09:13 GMT
  • 1 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.
  • குறிப்பாக 5 தலை நாகத்துடன் விநாயகர் இருப்பது போன்றும் சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் உள்ளது.

தருமபுரி,

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட பக்தர் தயாராகி வருகின்றனர்.

தற்போது தருமபுரியில் அதியமான் கோட்டை, பழைய தருமபுரி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 22 குடும்பங்கள் தருமபுரி மாவட்டத்தில் வந்து இங்கேயே தங்கி இருந்து கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பழைய தருமபுரி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் முகாமிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை செய்து விற்பனைக்கான தயார் நிலையில் உள்ளனர். இங்கு 1 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.

பரமசிவன், பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் ஆகியோருடன் விநாயகர் இருப்பது போன்றும், குறிப்பாக 5 தலை நாகத்துடன் விநாயகர் இருப்பது போன்றும் சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் உள்ளது. இது குறித்து சிலை செய்யும் ராஜஸ்தானை சேர்ந்த அர்ஜுன் என்பவர் கூறுகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு தடை விதித்ததால் செய்து வைத்த சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து பெரும் பொருள் நஷ்டம் ஏற்பட்டதாகவும், தற்பொழுது செய்து வைத்த அனைத்து சிலைகளும் பெங்களூரு சென்னை போன்ற பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்து ஏராளமானோர் விநாயகர் சிலை கேட்டு வாங்கி செல்கின்றனர்.

தொடர்ந்து வெளி மாவட்டம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதிய சிலைகள் செய்ய கேட்டு வருகின்றனர். அதனால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விற்பனை நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News