உள்ளூர் செய்திகள் (District)

200 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாபிராமர் சாமி ஊர்வலம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2024-08-04 04:56 GMT   |   Update On 2024-08-04 04:56 GMT
  • 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • சாமி ஊர்வலத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை என 2 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் செயல்பட தொடங்கியது.

கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பெருக்கு தினத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி கோவிலுக்கு அருகில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் கொண்டு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு தற்பொழுது வரையிலும் சுவாமி ஊர்வலம் வந்ததே இல்லை. எனவே, தங்கள் ஊர் பகுதியில் சாமி ஊர்வலம் வருவதற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி ஊர்வலம் நொச்சிப்பட்டி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இப்பகுதி மக்களுக்கு பிரமிக்கும் வகையில் காட்சி யளித்தார். சாமி ஊர்வலத்தை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

200 ஆண்டுகளாக சாமி ஊர்வலம் காணாத அப்பகுதி மக்கள் தற்போது தங்களது ஊரில் சாமி திருவீதி உலா வருவதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News