புத்தக திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - டத்தோ பிரகதீஸ்குமார் வேண்டுகோள்
- புத்தக திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திகொள்ளுமாறு டத்தோ பிரகதீஸ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் நகராட்சி திடலில் 8வது புத்தகத் திருவிழா கடந்த 25 ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.
இந்த புத்தகத்திரு விழாவில் ஏழாம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை). ப்ளஸ் மேக்ஸ் குருப் ஆப் கம்பெனி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூலாம்பாடி டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டு இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேச உள்ளார்.
மேலும் எழுத்தாளர் அகர முதல்வன் "அறம் எனும் பொறுப்பு" எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் அமுதத்தமிழ் ஆடரங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இது குறித்து டத்தோ பிரகதீஸ்குமார் தெரிவிக்கையில்.
வாசிப்பு ஒருமனிதனை மேம்படுத்தும். நல்ல புத்தகங்களை படிக்கும் போது விசாலமான சிந்தனையும், பிறதுறை அறிவும் ஏற்படும்.எனவே புத்தக வாசிப்பு அவசியமாகிறது. ஒரே அரங்கின் கீழ் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை நம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.