பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு
- பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு
- முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்திற்கென புதிதாக பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க அரசு அனுமதி அளித்து புதிய அலுவலகம் நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கான பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) அரியலூரில் செயல்பட்டு வருகிறது. இதனால் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர்கள் அரியலூர் சென்று வந்தனர். மேலும் பொதுமக்களும் கட்டிட எஸ்டிமேட் பெற அரியலூருக்கு செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கென தனியாக பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அமைக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அலுவலகத்திற்காக செயற்பொறியாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து செயற்பொறியாளரையும் நியமனம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் உள்ள பொதுப்பணித்துறை கட்டட உப கோட்ட அலுவலகத்தில் தற்காலிமாக கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு ஆகியோருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.